அலுவலக கோப்புகளுக்குள்
புதைந்திருந்த வேளை...
யாரோ,சொல்லத் தெரிய வந்தது
வெளியே நல்ல மழையாம்....
கோப்புகளை மூடி வைத்து
காகிதத்தை விரிக்கையில்
கொட்டியது
நினைவு மழை ...
சாளரக் கம்பியில் கைவைத்து பருகியதும்...
முழங்கால் நீரில் முழ்கி நீச்சல் பயின்றதும்...
மின்னல் புகைப்படங்களும்...
பொருள் விளங்காத
அர்ஜுனா அலறல்களும்....
காகித கப்பல் மூழ்கியதால் வந்த
வெட்கங்களும் ,
வேடிக்கை அவமானங்களும்....
எதிர் வீடு நண்பனின்
கப்பல் மூழ்கியதால்
ஏற்பட்ட களிப்பும்,
செய்த கிண்டல்களும்.....
அம்மாவின்
சேலை துவட்டல்களும்
செல்லத் திட்டுக்களும்
பருவ வயது மழையில் ஆடிய
மட்டைப்பந்தாட்டமும்....
நண்பனோடு நனைந்தே
கடந்த சாலைகளும்...
எதிர்ப்படும் கடைகளில் பருகும்
எண்ணிலடங்கா தேநீர்களும்...
வேளை கிடைத்து
வெளியூர் வந்த வேளைகளில்
பெய்த மழையின்
ஏகாந்த நனைதல்களும்
கரைத்து விட்ட கண்ணீர்களும்...
இவ்வாறாக
இணைந்து இருந்தவர்கள்
இயந்திர வாழ்க்கைச் சக்கரத்தில்
மிதி பட்டுப் போனதால்-எங்களை
இன்று
யார் யாரோ
அறிமுகம் செய்கிறார்கள்....