Wednesday, March 30, 2016

காதல் சொல்ல வந்தேன்





















விடியும்வரை இரவுக்குத் துணையாக 
முன்னிரவு முழுதும் விழித்துக்கிடந்து  
மூளையில் படிந்த வார்த்தைகளை 
கடிதமாய்....
காகிதத்தில்  முடிந்து 
முப்பது ஒத்திகைகள் முடித்து, 
அலுவலகம் அதற்கு விடுப்பளித்து
காலை முதலே 
கவனம் முழுதும் 
கடிகாரத்தில் குவித்து
முட்களை நகர்த்திப் பார்த்தும் 
மாலை விடிய யுகங்கள் பல ஆனது.
ஏகாந்த விரதம் இன்றுடன் முடிப்பதற்காய் 
அவள் வரும் பாதையில் 
அரைமணி நேர தவம் புரிய 
ஆறுகோடி அழகுடன் 
அவள் அருகில் வர 
அடைத்து வைத்திருந்த 
வார்த்தைகள் யாவும் 
திசைக்கொன்றாய் தெறித்து ஓட,
மூக்கின் மேல் விளைந்த வியர்வையில் 
மூன்றாவது முறை குளிக்க நேரவே 
இதயமும் துடிப்பதை நிறுத்தி ஏறக்குறைய 
இருபது நிமிடங்களானது,
இந்த முட்டாள் கொண்டுவந்த காதலை 
மொழிய முடியாமல் போகவே,
பரபரப்பு ஏதுமின்றி 
பாதகத்தி அவள் 
பார்வையிலையே மொழிந்து போனாள்,
களிப்பில் செய்வதறியாமல் 
எட்டிகுதித்து வானம் பிடித்து 
கையளவு சுருக்கி 
கண்காணா தொலைவில் வீசியதில் 
இருந்த இடம் தெரியாமல் 
தொலைந்து போயின-சில 
நிலாக்களும்,நட்சந்திரங்களும்.......


Thursday, March 17, 2016

கற்பனைக்காதலி...



நடுநிசியில் நீ வாழ்த்திய பிறகுதான்
நினைவுக்கு வந்தது...
இன்று நான் பிறந்தநாள் என

நீ பிறந்தநாளை
நினைக்கத் தொடங்கியதிலிருந்து,
மறக்கத் தொடங்கிவிட்டது
நான் பிறந்தநாள்.

எல்லோரின் வாழ்த்துக்களால்
என் பிறந்தநாள் அர்த்தப்பட்டது,
உன் வாழ்த்தால் தான்
என் பிறப்பே அர்த்தப்படுகிறது.

பிறந்தநாள் பரிசாக
எல்லோரும்...
எதைஎதையோ பரிசளிக்க,
நீ மட்டும்...
உன்னையும்,
உன் காதலையும்,
பரிசாக அளித்தாய்.

உன் வாழ்த்திலிருந்து
தொடங்கிவிட்டது...
என் வாழ்க்கை
.... 

காதலாற்றாமை....



காதலுக்கு....
அழகை மட்டும் முன்னிறுத்தி 
அறிவில் பின்தங்கி நிற்பவளே,
காதல்...
அழகில் தொடங்கி
அழகில் முடிவதில்லை.

....அழகில் தொடங்கி,
அன்பில் தொடர்ந்து,
பரஸ்பரம் புரிந்து,
சகலமும் பகிர்ந்து,
அர்ப்பணித்து,
அகமகிழ்ந்து,
காக்கவைத்து,
காத்திருந்து,
பரிதவித்து,
கசிந்துருகி,
கொஞ்சல் செய்து,
கெஞ்சவிட்டு,
கள்ளச் சந்திப்பில்
செல்லத் தொல்லையில்
மோகம் விட்டு
தேகம் தொட்டு,
எதற்கும் விட்டுக்கொடுக்காமல்,
எதையும் விடத் துணிந்து,
தோள் சுருங்கி
முடி நரைத்து
வாழ்வின்
கடைசி இருப்பு வரை
உறையவிடாமல்,
உலரவிடாமல்,(உலர்த்துதல்)
காத்து நிற்றலே காதல்

காதலின் சுவையறியாதவளே
சுகம் தெரியாதவளே
உன் காதலின் களிப்பை விட
வாழ்நாள் தனிமை
ஓர் வரமே....