Wednesday, May 1, 2013
எந்திரன்
ஆறு நாட்களாய்.....
தொலைந்திருந்த என்னை
இன்று கண்டுபிடித்தேன்
பற்றாக்குறை உறக்கம்
துரத்திய விடியல் ...
துரிதப் புறப்பாடுகள் -பேருந்தில்
தொங்கியே தொடர்ந்த பயணம்
தாமதமாய் அடைந்த அலுவலகம்
வசை பூசையாற்றிய அதிகாரி
தடுமாறித் தெளிந்த அலுவல் பணி
இயெந்திர வேகத்தில்
இரைப்பையில் கிடத்திய சோறு
பணப்பசியில் கூடுதல் பணி
கிட்டத்தட்ட இறந்தவனுக்கு
கிடைத்தது பேருந்தின்
சாளர இருக்கை
பயண நேரத்தில்
நிகழ்ந்ததொரு
மரண ஒத்திகை ..
ஒரு வழியாய்
உடைந்து முடிந்து
வீடு வந்து சேர்ந்தவுடன்
அடுத்த நாள் வேலைக்கான
ஆயத்தங்கள்
அவ்வாறே தொடர்ந்த
ஆறுநாள் பயணத்தில்
விடிந்தது இன்று ஒரு ஞாயிறு ....
தொல்லைகளை விட்டு
சற்று தொலைவில்..
மெதுவாய் விழித்த வானம் ..
நதிக்குளியல்
புறாக்களுக்கு இரையிடும் வாய்ப்பு
எழுத நினைத்திருந்த ஒரு கவிதை
வர்ணம் தீட்டாமல் விட்ட ஓவியம்
படிக்காமல் போன
வைரமுத்து கவிதை புத்தகம்
அம்மாவின் அசைவ விருந்து
வீட்டு ஒழுங்கமைவு ...
நாணம் தவிர்த்து
நண்பனுடன் அரட்டை
மாலை உலாவல் ...
நூலகப்பரிகாரம் ..
மொட்டை மாடியில்
அம்மாவின் நிலாச்சோறு
கொஞ்சம் மனிதனாய்
வாழ்ந்த நாளின் இறுதியில்
ஒரு கடினமான நினைவு
நாளை முதல் ஆறு நாட்களுக்கு-மீண்டும்
நானொரு எந்திர அவதாரம் ........
Subscribe to:
Posts (Atom)