Wednesday, March 30, 2016

காதல் சொல்ல வந்தேன்





















விடியும்வரை இரவுக்குத் துணையாக 
முன்னிரவு முழுதும் விழித்துக்கிடந்து  
மூளையில் படிந்த வார்த்தைகளை 
கடிதமாய்....
காகிதத்தில்  முடிந்து 
முப்பது ஒத்திகைகள் முடித்து, 
அலுவலகம் அதற்கு விடுப்பளித்து
காலை முதலே 
கவனம் முழுதும் 
கடிகாரத்தில் குவித்து
முட்களை நகர்த்திப் பார்த்தும் 
மாலை விடிய யுகங்கள் பல ஆனது.
ஏகாந்த விரதம் இன்றுடன் முடிப்பதற்காய் 
அவள் வரும் பாதையில் 
அரைமணி நேர தவம் புரிய 
ஆறுகோடி அழகுடன் 
அவள் அருகில் வர 
அடைத்து வைத்திருந்த 
வார்த்தைகள் யாவும் 
திசைக்கொன்றாய் தெறித்து ஓட,
மூக்கின் மேல் விளைந்த வியர்வையில் 
மூன்றாவது முறை குளிக்க நேரவே 
இதயமும் துடிப்பதை நிறுத்தி ஏறக்குறைய 
இருபது நிமிடங்களானது,
இந்த முட்டாள் கொண்டுவந்த காதலை 
மொழிய முடியாமல் போகவே,
பரபரப்பு ஏதுமின்றி 
பாதகத்தி அவள் 
பார்வையிலையே மொழிந்து போனாள்,
களிப்பில் செய்வதறியாமல் 
எட்டிகுதித்து வானம் பிடித்து 
கையளவு சுருக்கி 
கண்காணா தொலைவில் வீசியதில் 
இருந்த இடம் தெரியாமல் 
தொலைந்து போயின-சில 
நிலாக்களும்,நட்சந்திரங்களும்.......